அலுவலகத்திற்குள் புகுந்து VAO வெட்டி கொலை; உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் – மு.க.ஸ்டாலின்

ஸ்ரீவைகுண்டம் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவர், வல்லநாடு அருகே…

ஸ்ரீவைகுண்டம் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவர், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த 2 நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஏஓ அதிகாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆற்றில் மணல் அள்ளியது தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ராமசுப்புரமணியம், மாரி என்ற இருவர் படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ராமசுப்பரமணியத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விஏஓ-வின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.