வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு -பாமக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் முதல் பாமக பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரிக்கையை தளர்த்திக் கொண்ட ராமதாஸ், இட ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை உள் ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை முன்வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் நேரில் சந்தித்து இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்பிறகு நடந்த பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசின் அழைப்பை ஏற்பது என்றும், பேச்சுவார்த்தை முடிவின்படி அரசியல் ரீதியான நிலைப்பாட்டை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜி.கே.மணியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில் எடுக்கப்படும் முடிவினை பொறுத்து மீண்டும் பாமக ஆலோசனை நடத்தி, அரசியல் ரீதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.