டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வந்தே மாதரம் மசோதா’ அரசியல் சட்ட மோசடி மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகும். இதை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் சாசன சபை ஒப்புதல் அளிக்காத வந்தே பாரதம் பாடல் வரிகளை சேர்த்து அரசு மசோதாவை தாக்கல் செய்தது. இதை கடுமையாக திமுக எதிர்த்தது. ஆனால் விடாமல் மசோதாவை நிறைவேற்றினார்கள்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வரிகளை வேண்டுமென்றே அரசு சேர்த்துள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் சட்டம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்களவைக்கான அலுவல் திட்ட அறிவிப்பில் , வந்தே மாதரம் மசோதா இடம்பெறவில்லை. திடீரென 3 மணிக்கு இந்த மசோதாவை கொண்டு வந்தனர். இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
அரசியல் நிர்ணய சபையில் வந்தே பாரதம் பாடல் தேசிய பாடலாக ஒப்புக்கொள்ளப்பட்டது உண்மை, ஆனால் முதல் இரண்டு பத்திகள் தேசத்தை போற்றுவது , மற்ற இரண்டு பத்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுத்து1937 ம் ஆண்டு ராஜேந்திர பிரசாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், நேரு , மகாத்மா காந்தி ஆகியோர் அனைவருமே ஒன்றாக கடைசி இரண்டு பத்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானது, பாட தகுதியற்றது என காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் விட்டுவிட்டனர். ஆனால் இதற்கு ராஜேந்திர பிரசாத் மற்றும் அரசியல் நிர்ணய சபை ஆகியவை அனுமதி அளித்துள்ளதாக அவர்கள் கூறுவது மிகப்பெரிய பொய்.
இன்றும் வந்தே பாரதம் பாடல் என்று தேடினாலும் அதில் இடம்பெற்று இருப்பது முதல் இரண்டு பத்திகள் மட்டுமே. அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்டது, ஒப்புக்கொள்ளப்பட்டதும் இரண்டு பத்திகள் தான். வந்தே பாரதம் பாடலை முழுமையாக பாடுவது அரசியல் சாசனம் சட்டத்திற்கு எதிரானதாகும் .
ஒருவேளை இந்த பாடலை அவமதித்ததாக ஒருவர் தண்டிக்கப்பட்டதால், இது தேசிய பாடல் அல்ல. எனவே இதற்காக என்னை தண்டிக்க முடியாது என்று வழக்கு தொடர்ந்தாலும் அல்லது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டமும் தவறான சட்டம் என்று கூறினால் மத்திய அரசு என்ன செய்யும்…? இதனை அவையில் நான் எழுப்பிய பொழுது மத்திய அரசு பதறிபோய் அவசரகதியில் இதனை முடித்துவிட்டது. திமுக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.




