வந்தே பாரத் ரயில் இனி காவி நிறத்தில் இருக்கும் என்ற தகவல் வெளயாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள முக்கிய ரயில் தடங்களில் படிப்படியாக அறிமுகமாகி வரும் வந்தே பாரத் ரயில்கள், தமிழகத்திலும் சென்னை – மைசூரு மற்றும் சென்னை – கோவை தடங்களில் இயக்கப்படுகின்றன. விரைவில் சென்னை – நெல்லை மற்றும் சென்னை – திருப்பதி உள்ளிட்ட பல வந்தே பாரத் ரயில்களும் வர உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நீலமும், வெண்மையும் கலந்த வந்தே பாரத் ரயிலின் வெளிப்புறத் தோற்றத்தில், பிரதான நிறமாக தற்போது காவி சேர்த்துள்ளது. பழைய ரயில்கள் மாற்றமின்றி அதே நிறத்தில் செயல்படும் என்றும், புதிதாக அறிமுகமாகும் வந்தே பாரத் ரயில்கள் மட்டும் நிற மாற்றத்துக்கு உட்படும் எனவும் கூறப்படுகிறது
இதற்கு காரணமாக, வெண்மை நிறம் எளிதில் அழுக்கு படியும் என்பதால், காவிக்கு மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் பாஜகவின் அடையாளமாக கூறப்படும் காவியை, மக்கள் மனதில் பதியச் செய்யவே புதிய மாற்றம் புகுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
காவி மயம் என்பது, பாஜக தரப்பில் பெருமை படுவதற்கு உரியதாகவும், எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்புக்கு உரியதாகவும் அடையாளம் காணப்படுகிறது. தமிழகத்தில் கூட, வள்ளுவர் முதல் பெரியார் வரை, படங்கள் மற்றும் சிலைகளை சிலர் காவிக்கு மாற்றியதில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ரயிலின் வண்ணத்தையும் காவியாக மாற்றியிருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.







