உழவுத் தொழிலை புகழ்ந்து குறள் இயற்றிய திருவள்ளுவரை போற்றும் வகையில், புகைப்பட கலைஞர் ஒருவர் தனது வயலில் நெற்பயிர்களில் வள்ளுவர் உருவத்தை உருவாக்கி மரியாதை செலுத்தியுள்ளார்.
கும்பகோணம் அருகே மலையப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஒரு புகைபட கலைஞர். மேலும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், உழவுத் தொழிலை போற்றி திருக்குறளில் ஓர் அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவரை போற்றிடும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.
இதனால் புதிதாக முடிவெடுத்த அவர், தனது வயலில் நெற்பயிர்களில் திருவள்ளுவர் உருவத்தை வரைய திட்டமிட்டார். அதன்படி நேபால் மாநிலத்தை சேர்ந்த சின்னார் ரக நெல் ரகத்தையும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் மல்லி என்ற ரக நெல்லையும் பயன்படுத்தி திருவள்ளுவர் உருவத்தை கொண்டு வந்தார்.
50 அடிக்கு 45 அடி அளவில் திருவள்ளுவர் உருவத்தில் இயற்கை முறையில் நெல் நடவு செய்துள்ளார். இயற்கை முறையில் நெற்பயிர்களை வளர்த்து அதில் வள்ளுவர் உருவத்தை கொண்டு வந்து மரியாதை செலுத்தியுள்ளார். நடவு நட்டு 70 நாட்கள் கடந்து விட்டதாகவும், இன்னும் 40 நாட்களில் இந்த வயல் அறுவடைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
திருவள்ளுவருக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது உருவத்தை விவசாயி ஒருவர் வயல்வெளியில் நெல் மூலம் நடவு செய்திருக்கும் புதிய முயற்சிக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
– இரா.நம்பிராஜன்








