தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றி, பேணிப் பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு கலைப் பணித் திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது.
அதேபோன்று, நாட்டுப்புறக் கலைகளின் பல்வேறு பரிமாணங்களை உணரும் வகையிலும், அக்கலைகளை அழியாமல் பாதுகாப்பதற்கும், அவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட, “தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்” 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர், கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர் பொறுப்பையும் அவர் வகிப்பார் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வாகை சந்திரசேகர், 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர்-செயலராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றி யிருக்கிறார். வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2016 முதல் 2021 வரை அந்தத் தொகுதி மக்களுக்கு மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








