இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி விருது வழங்கி கெளரவித்துள்ளார். இன்று நடந்த குடியரசு தின விழாவின் போது அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30ம் தேதி காலை உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு காரில் வந்து கொண்டிருந்த போது உத்தரகண்ட் – ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி பயங்கர விபத்திற்கு உள்ளானதில் கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் கால், முதுகு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விபத்தை நேரில் பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் சுஷில்குமார், நடத்துனர் பரம்ஜித், நிஷு குமார், ராஜத் ஆகியோர் அவரை மீட்டு ரூர்கியுலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் டேராடூனில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்தது. பின்னர் ஜனவரி 4-ம் தேதியன்று அறுவை சிகிச்சைக்காக மும்பை கொண்டுச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் நலமுடன் திரும்புவதற்கான பாதை தொடங்கியுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷப் பந்த் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று பதிவிட்டிருந்தார். மேலும், தன்னை மருத்துவமனையில் அனுமதித்த ஓட்டுநர் சுஷில் குமார், நடத்துனர் பரம்ஜித், நிஷு குமார், ராஜத் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ரிஷப் பந்தை விபத்திலிருந்து மீட்ட சுஷில் குமார், பரம்ஜித், நிஷு குமார், ராஜத் ஆகியோருக்கு இன்று நடந்த குடியரசு தின விழாவில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி விருது வழங்கி கெளரவித்துள்ளார். சுஷில்குமார் சார்பாக அவரது மனைவி ரிதுவும் பரம்ஜித் சார்பாக அவரது அப்பா சுரேஷ் குமாரும் முலமைச்சர் கைகளால் விருதை பெற்றுக் கொண்டனர்.