நியாய விலைக் கடையில் அதிக அளவில் பொருட்கள் வேண்டும் என்றால் 2 குழந்தைகளுக்குப் பதிலாக 20 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மார்ச் 10ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். இவர் நேற்று பொது நிகழ்வில் கலந்துகொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சிறிய அளவிலான குடும்பங்களுக்கு நியாய விலைக் கடையில் பொருட்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய தீரத் சிங் ராவத் ‘ஊரடங்கு காலத்தில் எல்லா வீடுகளுக்கும் தலா 5 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ஒருவருக்கு 5 கிலோ என்று வைத்துக்கொண்டால் 10 பேருக்கு 50 கிலோ ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும். சிலரது குடும்பங்கள் சிறிதாக இருப்பதால் அவர்களுக்கு அதிக அளவில் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற பொறாமை உண்டானது. உங்களுக்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள் வேண்டும் என்றால் 2 குழந்தைகளுக்குப் பதிலாக 20 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.
மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ராம்நகர் என்ற இடத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்காவிடம் இந்தியா 200 ஆண்டுகள் அடிபட்டுக் கிடந்தது என்றும். ஆனால், அமெரிக்கா தற்போது கொரோனாவை கையாள்வதில் திணறி வருகிறது என்றும் பேசினார். அதாவது இங்கிலாந்து என்பதற்கு பதிலாக அமெரிக்காவை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பாக பெண்கள் ’ரிப்டு ஜீன்ஸ்’ (ripped jeans)அணியக்கூடாது என்றும் அப்படி அணிவதால் அவர்கள் குழந்தைகளுக்கு என்ன செய்தி சொல்ல வருகின்றனர் என்றும் கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 10,086,292 என்பது குறிப்பிடத்தக்கது







