உத்தரபிரதேச மாநிலத்தில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில், இன்று நண்பகலில் திடீரென துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சென்று பார்த்தபோது வழக்கறிஞர் ஒருவர் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவர் அருகில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கிடந்தது.
இறந்து கிடந்தவர், ஜலாலாபாத்-தை சேர்ந்த புபேந்திர பிரதாப் சிங் என்ற வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மற்றொரு வழக்கறிஞரை உடனடியாக கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். முன் பகை காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை அடுத்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவாதி, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டிருப்பது வெட்கக் கேடானது என்றும் வருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.








