நாடாளுமன்றத்தில் காந்திய வழியில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், விடைபெற உள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே அவையில் தான் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்டதை நினைவு கூர்ந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது இதயத்தில் சிறப்பிடம் உள்ளதாக தெரிவித்த அவர், அரசியலைக் கடந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றம்தான் ஜனநாயகத்தின் கோயில் என வர்ணித்த ராம்நாத் கோவிந்த், அவை விவாதங்கள் காந்திய வழியில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட ராம்நாத் கோவிந்த், இந்த பெருந்தொற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம் என நம்புவதாகத் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா மேற்கொண்ட முன்னெடுப்புகளை உலகின் அனைத்து நாடுகளும் புகழ்வதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை தான் மனதார வாழ்த்துவதாகவும், அவரது வழிகாட்டுதலால் நாடு பயனடையும் என்றும் குடியரசுத் தலைவர் கோவிந்த் கூறினார்.