சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் கடற்பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் நுழைந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் சூழ்நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். தைவான் சென்றடைந்ததும் நான்சி பெலோசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தைவானின் துடிப்பான ஜனநாயகத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்தவே தான் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தைவான் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்சி பொலேசியின் பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 4 முறை தைவானுக்கு சென்றனர். தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்வதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தென்சீன கடல்பரப்பில் தைவான் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் அமெரிக்காவின் 2 போர் கப்பல்கள் இன்று நுழைந்துள்ளன. தைவான் ஜலசந்தி பகுதியில் ஏவுகணை தாங்கி 2 போர் கப்பல்கள் தைவான் கடல்பகுதியில் நுழைந்துள்ளன. அமெரிக்க போர் கப்பல்கள் தைவான் ஜலசந்தி கடல் பரப்பில் நுழைந்த சம்பவம் சீனாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.








