மேடையில் யாரும் இல்லாத திசையை பார்த்து கைக்குலுக்கிய அமெரிக்க அதிபர் ஜோபைடனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் போது கைகுலுக்குவது மரியாதையான செயலாகும். சமீப காலங்களில் இரு நாட்டு தலைவர்கள் மரியாதை நிமித்தமாக கைகுலுக்குவது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு பேசும் பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் நடைப்பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலந்து கொண்டார்.
அதில் அவர், உணவு பொருள் விநியோகங்களில் ஏற்படும் நெருக்கடி குறித்து 40 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் தனது உரையை முடித்த பின் வலது பக்கம் திரும்பி கைக்குலுக்கும் போது, அவருடைய மரியாதையை ஏற்க அந்த பக்கத்தில் யாரும் இல்லை. அதிபரின் இந்த செயலை ’காற்றில் கை குலுக்கிய அமெரிக்க அதிபர்’ என சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து குடியரசு கட்சியின் முன்னாள் துணை தலைவர் ஹர்மீத் கே தில்லான், “வெள்ளை மாளிகை மற்றும் பைடன் குடும்பத்தை வழிநடத்துபவர்கள் எங்கே? அவரை அழகாக காண்பிக்கும் வேலையை அவர்கள் மறந்துவிட்டார்களா?”, என கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.







