ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளின் வினாத்தாள்! – சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஐ ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள், மாநில மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூன் 28 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் எனத் தெரிவித்தனர்.

இந்த மொழி பெயர்ப்பு 100 % சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இதுசம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.