தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் மே 31ம் தேதி வரை தாக்கல் செய்லாம் என அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார், அதிமுக சார்பில் சி வி சண்முகம், தர்மர், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆகிய 6 பேரும், சுயேட்சைகள் 7 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
ஜூன் 1ம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 7 சுயேட்சைகள் மனுக்கள் நிராகரிப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்பறுவதற்கான கடைசி நாள் இன்று (ஜூன் 3 ம் தேதி)எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாபஸ் பெறுவதற்கான அவகாசம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாவதாக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








