பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு மானிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் பிரதிமா பூமிக் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக
நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், சமூக நீநி மற்றும் அதிகாரமளிப்புத் துறை
இணை அமைச்சர் பிரதிமா பூமிக் கலந்து கொண்டார். கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பன குறித்து பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. சமூக பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், ஏழை எளிய பெண்களின் குடும்ப பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் வளர் இளம்பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு ’மோஷன் அபியான்’ என்ற திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைத்து விதமான சிகிச்சைகளையும் பெறும் வகையில் ’ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள், நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகளை இலவசமாக பெறமுடியும். பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும். இது குறித்து மாநில அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.







