கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிகமுவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளையும், கன்னியாகுமரியில் காலியாக உள்ள நாடாளுமன்ற தொகுதியையும் அதிமுக ஒதுக்கியுள்ளது. கன்னியாகுமரியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சுசிந்திரத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமிச்சர் அமித்ஷா தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பின், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக நாகர்கோவிலில் வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் என்ற நிகழ்ச்சியின் தெரு பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். அதன்பின் அவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக, பாஜக, பாமக தலைமையிலான அரசு ஆட்சி கட்டிலில் அமரும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி அவரை பெற செய்ய வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.







