கொல்கத்தா மியூசியத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு- பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரரின் வெறிச் செயல்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மியூசியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தொழிற் பாதுகாப்பு படை வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். கொல்கத்தாவின் மையப்பகுதியில் உள்ள பார்க் வீதியில்…

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மியூசியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தொழிற் பாதுகாப்பு படை வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

கொல்கத்தாவின் மையப்பகுதியில் உள்ள பார்க் வீதியில் நாட்டின் மிகப்பழைமையான அருங்காட்சியகங்களில் ஒன்றான இந்தியன் அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மியூசியத்திலிருந்து இன்று மாலை 6.30 மணி அளவில் திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிற்பாதுகாப்பு படையின் தலைமைக் காவலர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். மொத்தம் 15 ரவுண்டுகள் அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிற்பாதுகாப்பு படையின் உதவி எஸ்.ஐ மற்றும் தலைமைக் காவலர் படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த உதவி எஸ்.ஐ உயிரிழந்தார்.  மேலும் போலீசார் சிலரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொல்கத்தா போலீசாரும், துணை ராணுவத்தினரும் மியூசியத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் கடுமையாக போராடி,  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்த அந்த தலைமை காவலரை பிடித்து அவரிடமிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட அந்த தலைமைக் காவலர் மன நிலை பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது இந்த வெறிச் செயலுக்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தாவின் மையப்பகுதியில் உள்ள மியூசியத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அந்நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.