இந்திய தேசியக் கொடிக்கு உலக அளவில் மதிப்பு கூடியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த தேசியக் கொடி குறித்த பிரச்சாரம் தற்போது நமது நாட்டை தாண்டி உலக அளவில் பிரபலமாகி வருவதாகக் கூறினார்.
நாடு தனது 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது உலகின் குருவாக இந்தியா திகழ வேண்டும் எனும் வேட்கை ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்காக தானும் பங்களிப்பு ஆற்ற வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டிருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள உலக தலைவர்கள் பலரும் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அமித் ஷா, நமது முன்னோர்கள் செய்த தியாகத்தின் பலனை இந்தியா தற்போது பெற்று வருவதாகக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தற்சார்பு இந்தியா உருவாகி வருவதாகத் தெரிவித்த அமித் ஷா, நமது நாட்டின் பழங்கால பெருமையை கூறுவது நாட்டு மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக மட்டுமல்ல என்றும் நமது எதிர்கால பாதை குறித்த தெளிவைப் பெறுவதற்காகவும்தான் என கூறினார்.
இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நாட்டுப் பற்று ஏற்பட்டுவிட்டால் அது நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாகத் திகழும் என அமித் ஷா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடியை DP ஆக வைக்க வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, தனது சமூக ஊடக பக்கத்தில் தேசியக் கொடியை display picture(DP) ஆக அவர் மாற்றினார்.
இதேபோல், சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்றும் பிரதர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.










