”திமுகவில் பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை களைய உதயநிதி ஸ்டாலின் முயற்சிப்பார் என பா.ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 29-ம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாமன்னன் திரைப்படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ் , வடிவேலு மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.







