சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 15ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்போதே, திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த ஆட்சியில் பதவி வகித்த உள்ளாட்சித்துறை ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் பரவின. ஆனால் கடந்த ஆண்டு திமுக பதவியேற்கும்போது அவரது பெயர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அப்போது உதயநிதி சட்டமன்றத்தில் அனுபவ ரீதியாக பல்வேறு விஷயங்களை அறிந்த பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்ததாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில், திமுக ஆட்சிக்கு வந்து வரும் மே 7ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. மேலும் சட்டமன்றக் கூட்டத்தொடர் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் துறை செயலர்கள் பணியிட மாற்றம் இருக்கும் எனத்தெரிகிறது. அதைத்தொடர்ந்து மே 15ஆம் தேதியன்று உதயநிதி அமைச்சராக பதவியேற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரின் பதவியேற்போடு இணைந்து அமைச்சரவை இலாகா மாற்றமும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதிக்கு எந்த துறையை பெற்றால் சிறப்பாக இருக்கும் என அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை பெற்றால் நன்றாக இருக்கும் உதயநிதிக்கு நெருங்கிய ஆலோசகர்கள் அட்வைசாக கூறியுள்ளனர். அதுகுறித்து தனது ரிசர்ச் டீம் மூலம் பல்வேறு தகவல்களை உதயநிதி திரட்டியுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு, இவர்களின் கல்வி தகுதி என்ன ? இவர்களை முன்னேற்ற என்ன மாதிரியான திட்டங்களை உதயநிதி வகுத்தால் நன்றாக இருக்கும் போன்ற தகவல்கள் அந்த ரிசர்ச் டீமின் புள்ளி விபரங்களில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
உதயநிதி அமைச்சரானவுடன் முதற்கட்டமாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதற்கு காரணம் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், அவரது தொகுதியை சார்ந்த ஆயிரகணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும்படி அதிகளவில் மனு கொடுத்துள்ளனர். அப்போதே, அவர், தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை பிரமாண்ட அளவில் நடத்தி பலருக்கு வேலை பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல், மாநிலம் முழுவதும் நடத்துவது என்றும், திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்குவதற்காக ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ்களை நடத்துவது குறித்தும் உதயநிதி சிந்தித்து வருகிறாராம்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், திராவிட சித்தாந்தங்களை இளைஞர்களிடையே கொண்டு செல்வதற்கும், பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் கருதுகிறாராம். அதுமட்டுமின்றி, பசையான துறைகளை பெறுவதைவிட இதுபோன்ற ஒரு துறை தனக்கு கிடைத்தால்தான் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் மக்களின் மனதில் இடம் பெற முடியும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவருக்கு அட்வைஸ் வழங்கியுள்ளாராம். இதனையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்ட உதயநிதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையினால் என்னென்ன திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் டீமிடம் கேட்டறிந்து வருவதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி