உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென திருச்சி திமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவில் அண்மைக் காலமாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமாக எழுந்து வருகிறது. அமைச்சர்கள் வெளிப்படையாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். திமுக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போதும் உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக்க வேண்டும் என திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டமாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்த நிலையில் தற்போது உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என முதல் மாவட்டமாக திருச்சி தெற்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்த மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.







