கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி பெற்றது ஊழல் இல்லாத ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்த வெற்றியாகும் என பாஜக துணைதலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக ஆளும் கட்சியாக உள்ள திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து திரிபுரா, நாகாலாந்து மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி உறுதியாகி உள்ளதையடுத்து தமிழக பாஜக தலைமை அலுவலமாக கமலாலயத்தில் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் வி.பி. துரைசாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணை தலைவர் வி.பி. துரைசாமி, மூன்று மாநில தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. நல்ல முறையில் அங்கு கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. திரிபுராவில் தனி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மொத்த வருவாயில் வடகிழக்கு மாநிலங்களுக்கு 14 சதவீதம் ஒதுக்கியதன் காரணமாக பாஜகவுக்கு மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி பெற்றது ஊழல் இல்லாத ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்த வெற்றியாகும். ஈரோட்டு கிழக்கில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. துணி துவைத்தும் தோசை பரோட்டா போட்டும் தான் திமுக வாக்கு கேட்டார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து 35 வயது நிரம்பிவிட்டால் பிரதமராவதற்கு தகுதியுண்டு. பிரதமர் வேட்பாளர்களாக புரொமோட் செய்பவர்களை மேடையில் உட்கார வைத்து, மதிமுக, இடதுசாரிகளை கேவலப்படுத்திவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைப்பார்க்கும் போது உதயநிதியை முதலமைச்சராக்குவதற்கு திட்டமா? அல்லது ஸ்டாலினுக்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகம் எழுகிறது.