ரயில் டிக்கெட் கட்டண உயர்வு – இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

ரயில் கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் தற்போது உயர்த்தப்படவில்லை. புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் முதல் 500 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 501 முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபாயும், ஆயிரத்து 501 முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும், 2 ஆயிரத்து 501 முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரயில் கட்டணம் சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.