சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் பிற்பகல் முதலே கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையாக போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டு நிறுவனம் போதிய வசதிகளையும் ஏற்பாடு செய்யாததால் பலர் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி தவித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதேபோல கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற முதலமைச்சரின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.
இதேபோல நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இடையே பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கூட்டம் அதிகமானதால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து தொடர்பாக பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக பெருநகர சென்னை காவல் கிழக்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.