பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் அமைந்துள்ள
சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில்
இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான
சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்தனர்.

இதில் உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான
தென்னிந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலை சிகரத்தில் அமைந்துள்ள காட்சி முனையை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதல் குவிந்தனர்.
மேலும் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி டெலஸ்கோப் கருவி மூலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த மலைகளையும், பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வனப்பகுதிகளையும், மாநில எல்லைப் பகுதிகள் மற்றும்
மாவட்டத்தின் எல்லை பகுதிகளையும் கண்டு ரசித்தும் செல்பி புகைப்படங்கள்
எடுத்தும், உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து விடுமுறை நாளை
கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க வருகை புரிந்ததாகவும் உதகையில் நிலவும் இதமான கால நிலையில் உதகை தொட்டபெட்டா மலை சிகரத்தில் அமைந்துள்ள காட்சி முனைகளை கண்டு ரசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.







