எஸ்.எஸ்.ராஜமௌலி, தனது குடும்பத்தினருடன் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சியான தருணங்களை வீடியோவாக அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிகழ்வு பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் உட்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி . இவர் கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சென்ற கோயில்களின் வீடியோக்கள் ஆகியவற்றை தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் நீண்ட நாளாக சாலை பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் தற்போது நிறைவேறி உள்ளது. அதை நிறைவேற்றிய எனது மகளுக்கு நன்றி. ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி. மதுரை போன்ற இடங்களுக்கு சென்றோம்.
கிடைக்கப்பெற்ற அந்த ஒரு சில நாட்களில் சில முக்கிய இடங்களை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது. நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் கலையுடன் கூடிய பாண்டியர்கள் சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் கட்டிடக்கலை பார்த்து வியந்தேன், அதை பார்த்ததும் அன்றைய ஆட்சியாளர்களின் ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.
இதுமட்டுமின்றி நாங்கள் சென்ற மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தில் உள்ள காக்கா ஹோட்டல் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் சாப்பிட்டோம். உணவு மிகவும் அருமையாக இருந்தது. ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடையும் அதிகரித்து விட்டேன். மூன்று மாத வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர் இந்த தமிழக சுற்றுப்பயணம் எனக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தை அளித்ததுள்ளது. இவ்வாறு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ssrajamouli/status/1678647769291165697?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








