”திரும்பி என் பிள்ள வந்து என்ன அம்மா-னு கூப்புடுமா!” என சிவகங்கையில் பள்ளி வாகன விபத்தில் உயிரிழந்த மாணவரின் தாயார் கண்ணீர் மல்க நியூஸ்7 தமிழிடம் பேசியது பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார் பள்ளி உள்ளது. சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வருவது வழக்கம். அந்த வகையில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த வேன், சர்வநேந்தல் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த பொதுமக்கள் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் முலைக்குளத்தை சேர்ந்த ஹரிவேலன் (வயது 12) என்ற 7ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சம்பந்தபட்ட பள்ளியிருக்கும் இடத்திற்கு விரைந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் அங்குள்ள பொதுமக்களிடம் இந்த விபத்து குறித்து கூறியதாவது, “கிராமங்களில் நடத்தப்படும் தனியார் பள்ளி வாகனங்களில் பெரும்பாலும் விதிகளை பின்பற்றுவது இல்லை. தற்போது பள்ளி கேட் அடைக்கப்பட்ட நிலையிலும், காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து 8 மணி நேரமாகியும் இன்னும் விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.” என தெரிவித்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவனின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உயிரிழந்த மாணவன் ஹரிவேலனின் தாயார், 15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளை எனவும், திரும்ப என் பிள்ளை வந்து அம்மா என கூப்பிடுமா? எனவும் கண்ணீர் மல்க கூறினார்.
மேலும் விதிகளை பின்பற்றாத அந்த பள்ளியை மூட வேண்டும் எனவும், மாணவனின் தாயார் தெரிவித்தார். மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகளுடன் மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுதொடர்பான நியூஸ் 7 தமிழின் நேரலை காணொலியை காண :







