குடிக்கு அடிமையான தந்தை… ஆத்திரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசி விற்பனையாளரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

காரைக்குடி அருகே பள்ளத்துாரை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் ராஜேஷ் பாண்டி (வயது 23 ). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது தந்தை குடிபோதைக்கு அடிமையானதால் மனவேதனையடைந்த ராஜேஷ் பாண்டி, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்.

இதில் அங்கு விற்பனையாளராக பணிபுரிந்த அர்ஜுனன் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த பள்ளத்தூர் போலீசார் ராஜேஷ் பாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி அறிவொளி விசாரித்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.