தமிழ்நாட்டில் மேலும் 300 நியாய விலைக் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்துவது என்றும், காய்கறி அங்காடி மூலம் நகர பகுதிகளில் காய்கறி விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தக்காளி விற்பனை , தக்காளியின் விலை நிர்ணயம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் புதன்கிழமை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.






