நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரையிலும், 2வது கூட்டத்தொடர் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் 2 கட்டமாக நடைபெற உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
குடியரசு தலைவர் உரையைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023-ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். இதனை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் இன்றும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான நாளையும், கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என நாடாளுமன்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.







