கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 86 லட்சம் தடுப்பூசிகள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,05,85,229 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 39,796 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த 130 கோடி மக்கள் தொகையில் 60 சதவிகிதமான மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டவேண்டுமெனில் தினசரி 86 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். கடந்த வாரத்தில் நாடு முழுவதும் சராசரியாக தினசரி 46 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஞாயிறு மட்டும் 15 லட்சம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் தினசரி இலக்கு என்பது 71 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்குறிப்பிட்ட அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது முரணாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 35 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதை மத்திய அரசு இலக்கா கொண்டுள்ளது. தற்போது வரை 4,02,728 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







