விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்கள் நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், சிலியைச் சேர்ந்த கிறிஸ்டியன் கேரினை எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-2, 6-4, 6-2 என்ற நேட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், இத்தாலியைச் சேர்ந்த லொரன்சோ சொனிகோவை எதிர்கொண்டார்.
39 வயதான பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சொனிகோவை எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், விம்பிள்டன் தொடரில் 18வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி பெடரர் சாதனை படைத்துள்ளார்.









