தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மத்தியகிழக்கு அரபிக்கடல் தென் மேற்கு மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் 25ம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







