’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!

தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை, ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 16ஆவது சட்டப் பேரவையின் கூட்டத்…

தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை, ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு 16ஆவது சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில், இன்று (21.06.2021) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, திராவிட இயக்க அரசாக செயல்படும் என்பதற்கு கட்டியங் கூறத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

மாநில சுயாட்சி முழக்கம் ஓங்கி ஒலிக்கும் ஆளுநர் உரையில், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால், அரசமைப்புச் சட்டத்தின் துணை கொண்டு எதிர்ப்போம் என, ஒன்றிய அரசுக்கு உறுதியாக சுட்டிக் காட்டப்பட்டுள் ளது. மேலும், மாநில அரசுகள் மூலமாக, வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கவும், கூட்டாட்சிக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும் அறைகூவல் விடுத்து இருக்கின்றது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 343 இல் திருத்தம் செய்து, தமிழ் மொழியை இந்திய அரசின் அலுவல் மொழி ஆக்கிட வழிவகை காணப்படும்; தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்புகள், தமிழ் மொழி பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.

பாழ்பட்டுப் போன பைந்தமிழ் நாட்டைச் சீரமைக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் உரையில் அகரம் தீட்டப்பட்டு இருக்கின்றது. மாநில வளர்ச்சியை மேம்படுத்தவும், பொருளாதார இலக்கை அடையவும் முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு, அதில் பொருளாதார அறிஞர்கள் இடம்பெறுவர் என்ற அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கின்றது.

தமிழ்நாட்டில் மண்டல வாரியாக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துதல், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு, அரசுத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்நாட்டின் விரைவான வளர்ச்சிக்குப் பாதை அமைக்கும். மக்களுக்கு இணைய வழியில் அரசு சேவைகள் வழங்குதல், சேவைபெறும் உரிமைச் சட்டம், ஊழலை ஒழித்திட லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குதல் போன்ற அறிவிப்புகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்யும். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் அமைத்தல், சென்னை மாநகர விரிவாக்கம், சிங்கார சென்னை 2.0 திட்டம் போன்றவை வளர்ச்சியைப் பரவலாக்கும் வரவேற்புக்குரிய திட்டங்கள் ஆகும்.

நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தப்பட்ட வேளாண் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கை என்ற அறிவிப்பு, திமுக அரசின் வேளாண் துறை மீதான தனிக் கவனத்தை வெளிப்படுத்துகின்றது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற புதிய சட்ட முன்வடிவு நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும் என்ற அறிவிப்பு, மருத்துவம் பயிலத் துடிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன ஏழை எளிய மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றது. மேகேதாட்டு அணை கட்ட கடும் எதிர்ப்பு, முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துதல் போன்றவற்றில் தி.மு.க. அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் உரை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் உரிமை வாழ்வை உறுதி செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ மக்களுக்கு இந்தியக் குடி உரிமை அளிக்கக் கோரி இருப்பதும், திமுக அரசின் ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையைக் காட்டுகின்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில், தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை, ஆளுநர் உரை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.