தமிழகத்தில் நாளை முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் குவிந்துள்ளனர்.
கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளையுடன் ஊரடங்கு நிறைவடைவதால் வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி நாளை முதல் ஒரு வாரத்திற்கு, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பால், மருந்தகங்கள் உள்ளிட்டவை திறக்கலாம் என்றும், மளிகை மற்றும் காய்கறி கடைகள், ஒருவாரத்திற்கு திறக்க அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்தது. எனினும், பொதுமக்களின் வசதிக்காக நேற்றும் இன்றும் இரு தினங்களுக்கு மட்டும், கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன.
சென்னையின் பல்வேறு இடங்களிலும், ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல், பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். காலை முதலே கோயம்பேடு சந்தையில், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தி.நகரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். இதுபோல், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், பொதுமக்கள் மீன் வாங்க திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோன்று, நெல்லை பாளையங்கோட்டை சந்தையில், காலை முதலே மக்கள், ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இன்று ஒருநாள் பேருந்து இயங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளதால், வெளியூர்களில் இருந்தும் வந்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
திருச்சியிலும் அதிகாலை முதலே மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். முகூர்த்த நாட்கள் வருவதால் திருமணத்துக்கு தேவையான ஜவுளி, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கவும், உணவு பொருட்களை வாங்கவும், பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.