புதிய மீன்பிடி மசோதாவை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்

புதிய மீன்பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சீர்காழி தாலுக்காவிற்குட்பட்ட திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு உள்ளிட்ட 18…

புதிய மீன்பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சீர்காழி தாலுக்காவிற்குட்பட்ட திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி, நேற்று முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த மீனவர்கள், இரண்டாம் நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் போராட்டம்

அப்போது, திருமுல்லைவாசல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் 3 மீனவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை ஒருநாள் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகில் கருப்புக்கொடி ஏற்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.