கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் விழாவில் பேசியதாவது:
உலகெங்கிலும் தலை சிறந்த தொண்டு நிறுவனமாக அரிமா சங்கம் இருந்துள்ளது. 15 ஆண்டுக்கு முன், ஒரே நாளில் அரிமா சங்கத்துடன் மாநகராட்சி இணைந்து 155 முகாம் நடத்தினோம். அந்த ஒரே நாளில் 63, ஆயிரம் பேர் பயன்பெற்றனர். இதன் மூலம் சென்னை மாநகராட்சி லிம்கா சாதனையில் இடம் பிடித்தது. அரிமா சங்கம் மூலம்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
கடந்த இரண்டரை மாதத்தில் 33 மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளேன். இன்னும் 5 மாவட்டத்திற்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டால் அனைத்து மாவட்டத்திற்கும் சென்ற அமைச்சராக நான் இருப்பேன். தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பல உதவிகளை அரிமா சங்கம் செய்து வருகிறது.
கொரோனா தொற்று தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. நாளை தினசரி பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 குழந்தைகள் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர். மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுதான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.








