தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்காக கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தில் தற்போது கையிருப்பில் தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறும். 5 ஆயிரம் வணிகர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறத.
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து வரும் 11-ம் தேதி தான் 8.5லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரும் என தெரிவித்தார். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11-ம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.
மேலும், மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து தடுப்பூசி மற்றும் மதுரை எய்ம்ஸ் பணிகள் உள்ளிட்ட விஷயங்களை பேசுவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த வார இறுதியில் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்கவுள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.







