தமிழை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணை 12-10-2004 அன்று வெளியிடப்பட்டது. தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்து இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி – இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு இந்திய ஒன்றிய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மொழி தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி- அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடுவோம்” என்று உறுதியளித்துள்ளார்.







