சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் எழுதிய கடிதத்தில், பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள, உரிய காலத்தில் வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை இருப்பதாக அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி அன்று சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் லேசான மழை பெய்யும் எனக் கூறியிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மிக கனமழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மிக கனமழை பெய்த பிறகே வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்டை” வெளியிட்டது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சேவை போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போனதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் இந்த இயலாமை உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும், முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது எனவும், இதனால் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.