அரசு கலை, அறிவியல் கல்லூரிகளே இல்லாத சட்டமன்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 1 அரசு உதவி பெறும் கல்லூரி உள்ளது. 33 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளதாகவும், இது தவிர தொழில்நுட்பக் கல்லூரிகள், பல வகை தொழிநுட்பக் கல்லூரிகளும் உள்ளது” என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பூந்தமல்லி தொகுதியில் உள்ள அரசுக் கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் அதிக மாணவர்களை சேர்க்க ஏதுவாக 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத சட்டமன்ற தொகுதிகள் நிறைய உள்ளது என்றும், அரசுக் கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி புதிய கல்லூரிகளைத் தொடங்கவும், பிற சட்டமன்ற தொகுதிகளில் புதிய கல்லூரிகளைத் தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.