சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை…

திருப்பத்தூர் அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முதல் மாடாக சிராவயல் கோவிலுக்கு சொந்தமான காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்பு ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் தொழுவில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

மஞ்சுவிரட்டை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட மருத்துவ துறையின் சார்பில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். காளைகள் மற்றும் வீரர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்பே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இப்போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்து போட்டியை கண்டு ரசித்தனர். ஆங்காங்கே கட்டு மாடுகள் அழித்துவிட்டப்பட நிலையில், கூட்டத்தில் சீறிப்பாய்ந்த மாடு முட்டியதில் மேலூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.

மேலும், இச்சம்பவத்தால் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.