திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் குளத்தை தூர்வாரக்கோரி தனி ஒரு ஆளாக 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான இதற்கு மணிமுத்தாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரானது கால்வாய் மூலம் வந்து சேர்கிறது. இக்குளத்தின் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெருகிறது.மேலும் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்கிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இக்குளத்தை முறையாக தூர்வாராத காரணத்தினால் குளம் முழுவதும் சேறும்,சகதியுமாக உள்ளதினாலும், மணல் திட்டுகளாலும் உள்ளது.இதனால் குளத்தில் நீரை தேக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தை முறையாக தூர்வாரி அதிகளவில் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விஜயநாராயணபுரம் விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 9 நாட்களாக தனி ஒரு ஆளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,ஊர் பொதுமக்கள், என பல்வேறு தரப்பினர் ஆதரவளித்து வந்தனர்.
பத்தாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட அவருக்கு ஆதரவாக ஒருநாள் மட்டும் இட்டமொழி, சங்கணான்குளம், விஜயநாராயணத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.அப்போது முருகனை கைது செய்த போலீசார் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவருக்கு அங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் அவரை காண மருத்துவமனை வாயிலில் பல்வேறு தரப்பினரும் குவிந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
—-வேந்தன்