திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் வார்டு கவுன்சிலர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்குள்ள 2வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்து காலிக்குடங்களுடன் ராதாபுரம்-கூடங்குளம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடங்குளம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஒரு வார காலத்திற்குள் குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைதொடர்ந்து அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—வேந்தன்