திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

திருச்செந்தூரில் தனியார் பள்ளியில், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம்
வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆகாஷ்(14). இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்குமரன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து
வருகிறார். இந்த கல்வியாண்டு பள்ளி திறந்த நாள் முதல் ஆசிரியர்கள் மற்ற மாணவர்களை விட ஆகாஷ்-க்கு கடும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் ஆகாஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையிலும் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவன் ஆகாஷை மற்ற மாணவர்கள் முன்னிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தரக்குறைவாக பேசி, திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் ஆகாஷ் வகுப்பறையிலிருந்து ஓடிவந்து பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மாணவன் ஆகாஷை மீட்டு, கார் மூலம் திருச்செந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது காவல்துறையினரிடம் ஆகாஷ் பள்ளியில் தன்னை அதிகளவில் டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் பள்ளி முதல்வர் சத்யா மற்றும் ஆகாஷின் வகுப்பு ஆசிரியர் பொன்ராணி உள்பட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.