செந்நாய் கூட்டத்தைக் கண்டு மிரண்ட புலி வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தின் கூடலூரை அடுத்த பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால், காடு பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை வனத்துறையினர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனச்சாலையில் 10 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்தப் புலியை எட்டுக்கும் மேற்பட்ட செந்நாய்கள் சூழ்ந்தன. பிறகு புலியை தாக்க முயற்சி மேற்கொண்டன. புலி, செந்நாய் கூட்டத்தை எதிர்த்தாலும் செந்நாய்கள் நாலாபுறமும் சுற்றி நின்று புலியை தாக்க முயற்சித்தது.
ஒரு கட்டத்தில் செந்நாய்களைப் பார்த்து பயந்த புலி, அப்பகுதியில் இருந்து காட்டுக்குள் ஓடியது. இச்சம்பவத்தை ரோந்து பணியில் ஈடுபட்ட கர்நாடக மாநில வனத்துறையினர் தங்களது செல்போனில் பதிவு செய்து, வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.









