மும்முனை மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் அருகே மின்னம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் இன்று விவசாயிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், முதல்வர் அறிவித்த விவசாயிகளுக்கான 24 மணி நேர மும்முனை மின்சாரம் தேர்தல் முடிந்த நிலையில் பல இடங்களில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், விவசாய நிலங்களை அபகரிக்க பலர் முயற்சிக்கிறார்கள் எனவும், அதனைத் தடுக்க தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.







