தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே, தங்கையின் கணவர் உள்ளிட்ட ஐந்து பேரை அரிவாளால் வெட்டிய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தெற்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்த ஜெயபிரியாவுக்கும், வடக்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்த ஜனகராஜிக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஜெயப்பிரியாவுக்கு, வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த ஜெயபிரியாவின் பெற்றோரும், அவரது சகோதரரும், கணவர் ஜனகராஜிடம் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியுள்ளது. அப்போது, ஜெயப்பிரியாவின் சகோதரர் சின்னச்சாமி, அருகே கிடந்த அரிவாளை எடுத்து, தமது தங்கையின் கணவர் ஜனகராஜையும், அவரது உறவினர்களையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஐந்து பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின்பேரில், ஜெயப்பிரியாவின் தந்தை, தாய், மற்றும் சகோதரர் சின்னச்சாமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







