சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் ஹாக்கி போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், லிஃப்டில் மூன்று ஜூனியர் ஹாக்கி வீரர்கள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாவது ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி நாளை முதல் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த ஒரு வருடமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் மைதானம் புனரமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இன்று காலை முதல் மைதானத்தில் பயிற்சியில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்தில் இயங்கும் இரண்டு லிஃப்டில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜூனியர் ஹாக்கி வீரர்கள் மூன்று பேர் சிக்கிக்கொண்டனர். இரண்டாவது தளத்தில் லிஃப்ட் வந்த போது கதவுகள் திறக்கப்படாத நிலையில் கூச்சலிட்ட வீரர்களின் சத்தத்தை கேட்ட பராமரிப்பாளர்கள் லிப்டின் கதவை உடைத்து சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.






