புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடி போலீசார் இன்று இது தொடர்பாக மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது 35 சிபிசிஐடி போலீசார் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் வேங்கவயல் கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வந்து சமத்துவ பொங்கலை மக்களுக்கு வழங்கினர். முன்னதாக கோயிலில் மூன்று தரப்பினரும் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சமூக மக்கள் இதனை புறக்கணித்துள்ளனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அய்யனார் கோவில் வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்காகத்தான் தமிழக அரசு சிபிசிஐடி வசம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. தற்போது இந்த கிராமத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக தான் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை. ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை திருப்புகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழக அரசு மெத்தனமாக இந்த வழக்கில் இருக்கவில்லை. உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. உரிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி தான் முதல்வர் தலைமையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது” என்று ரகுபதி தெரிவித்தார்.